வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Wednesday, June 30, 2010

சிதறுண்ட காலக்கடிகாரம்




முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில்
உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக்கூடும்
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல
மிக அவதானமாக அவனையும்,அவன் ஞாபகங்களையும்
உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்.

ஒளிமிகு உலகத்தை
உனக்கு பரிசளித்த அந்த வயோதிபன்
தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ்
முடங்கிப் படுக்கையில்
பல வர்ணங்களிலான இந்த உலகம்
மெல்ல, மெல்ல உருகிச் சிதைவதினை
நீ காணத் தலைப்படுவாய்

வாழ்வின் அர்த்தங்களை,
அர்த்தங்களின் வர்ணங்களை
குழைத்து தந்த வயோதிபனின்
காலக்கடிகாரம்
சிதறுண்டு கிடக்கும் மௌனவெளியில்
கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி
ஒரு மரங்கொத்தி சிறகசைக்க
எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்.

24.08.2007
தானா விஷ்ணு

Monday, June 28, 2010

நடுநிசிப் பொம்மைகள்




நடு நிசிகளில்
பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன
அவைகளின் விழிகளுள் படர்கிறது
உதிர்ந்துகிடக்கும் மிரட்டும் விழிகள்

பொம்மைகள் சிரித்துப் பேசும்
மனநிலையில் இருப்பதில்லை
மிரட்டும் விழிகள்
ஆணியடிக்கிறது அதன் அடி மனதில்

எப்போதும் அறையின்
ஏதாவதொரு மூலையில்
மௌனமாய் முகத்தில் சோகம் நிரம்பி
அம்மனமாக சிலவேளை உறங்குகின்றன
அல்லது விழித்திருக்கின்றன.


பொம்மைகள் விழித்திருக்கும் போதும்
அல்லது உறங்கும் போதும்
அதன் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதோ
அல்லது
கொடூரமான பறவையொன்றினதாகவோ
அல்லது
கொடூரமான மனிதனுடையதாகவோ
தன் அடையாளம் காட்டுகிறது.

அறையின் மத்தியில்
உதிர்ந்துகிடக்கும் விழிகள்
நினைவில் வரும்போதெல்லாம்
பொம்மைகள்
தமது முகங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கு
அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.

23-05-2006
தானா விஷ்ணு

Sunday, June 27, 2010

நிழற்படங்கள்


வெளவால்களும் சிலந்திகளுமாய்
கூடிவாழும் வீடொன்றில்
தொங்கியபடி இனம் தெரியாதொருவனின்
நிழற்படம்
முன்பெப்போதுமே கண்டிராத அந்த முகம்
நன்கு பழகியவனைப் போல்
புன்னகைக்கிறது.

எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின்
தனித்திருப்பது கூடத்தெரியாமல்
புன்னகைக்கும் அந்த உருவம்
என்னுடையதாய் மாறுகின்றது.
நான் திகைத்துத் திரும்புகையில்
சுவர் எங்கும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.

15.12.2008
தானா விஷ்ணு