வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Monday, June 28, 2010

நடுநிசிப் பொம்மைகள்




நடு நிசிகளில்
பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன
அவைகளின் விழிகளுள் படர்கிறது
உதிர்ந்துகிடக்கும் மிரட்டும் விழிகள்

பொம்மைகள் சிரித்துப் பேசும்
மனநிலையில் இருப்பதில்லை
மிரட்டும் விழிகள்
ஆணியடிக்கிறது அதன் அடி மனதில்

எப்போதும் அறையின்
ஏதாவதொரு மூலையில்
மௌனமாய் முகத்தில் சோகம் நிரம்பி
அம்மனமாக சிலவேளை உறங்குகின்றன
அல்லது விழித்திருக்கின்றன.


பொம்மைகள் விழித்திருக்கும் போதும்
அல்லது உறங்கும் போதும்
அதன் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதோ
அல்லது
கொடூரமான பறவையொன்றினதாகவோ
அல்லது
கொடூரமான மனிதனுடையதாகவோ
தன் அடையாளம் காட்டுகிறது.

அறையின் மத்தியில்
உதிர்ந்துகிடக்கும் விழிகள்
நினைவில் வரும்போதெல்லாம்
பொம்மைகள்
தமது முகங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கு
அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.

23-05-2006
தானா விஷ்ணு

No comments:

Post a Comment