வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Thursday, July 1, 2010

ஓவியத்தின் கோடுகளில் நீளும் வாழ்ந்து போனவனின் குறிப்பு




வாழ்தல் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீதில் கவிகிறது
மீளவும் எனது சாபம்

தேவதைகாள்!
எனது இறுதிப் பிரார்த்தனைகளும்
அர்த்தமிழந்தன.

தூக்கிலிடப்பட்ட எனது இளமையை
குற்றுயிராகவேனும் காப்பாற்ற முடியா
விழிகள் இழந்த குரங்கென
தெங்கித் திரிகிறேன் பிரபஞ்சக் கிளைகளெங்கும்.

சுருக்கில் நசுங்கும் ஆயுள் கழுத்தில்
கயிறுவரைந்த கோடுகளை
யாவரும் அறிவதற்காய்
யாரேனும் பத்திரப் படுத்தட்டும்

தேவதைகாள்!
அர்த்தமிழந்துபோன உங்களுக்கான
துயர் மிகுந்த பிரார்த்தனைகளையும்
மீளத்தாரும்
வாழ்வினைத் தொலைத்தலையும்
பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்களில்
அவற்றினைச் சேமித்தல் வேண்டும்.

வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்படப் போகும்
எனது குறிப்புகளை
நான் வரையும்
சிக்கல் நிறைந்த ஓவியங்களிலிருந்து
யாவரும் வேறுபடுத்திக் கொள்ளட்டும்.

வாழ்வின் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீது கவிகிறது
மீள,மீள எனது சாபம்
ஒரு குடுகுடுப்பைக் காரனின் வார்த்தைகள் போல.

23-02-2007
தானா விஷ்ணு

1 comment:

  1. கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!!

    ReplyDelete